தொல்லை தரும் தேமல்: கவனித்தால் எளிதாக விரட்டலாம்….!

தோல்களில் ஏற்படும் பூஞ்சை தொற்று நோய்களில் முதலிடத்தில் உள்ளது தேமல். மலேசேசியாஃபர்ஃபர் என்னும் கிருமியால் இந்த தொற்று வருகிறது. இது ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடியது. தேமல் தொற்று உள்ளவரின் ஆடை, சோப், வியர்வை உள்ளிட்டவை வழியாக எளிதில் பரவுகிறது. இளம் வயதினரை அதிகம் தாக்கும் தோல் நோய்களில் இதுவும் ஒன்றாகும்.

மார்பு, கழுத்து, முகம், தோள்பட்டை, கை,கால், தொடை பகுதிகளில், தோல் சிறிது நிறம் குறைந்து அல்லது அதிகரித்து மெல்லிய செதில்களுடன் வட்ட,வட்டமாக மற்றும் திட்டுத்திட்டாக படைகள் போன்று காணப்படுவது இதன் அறிகுறியாகும்.

வியர்வை அதிகம் சுரப்பவர்களுக்கும், நீரிழிவு குறைபாடு உள்ளவர்கள், ஸ்டீராய்டு மாத்திரை அதிகம் எடுத்து கொள்பவர்கள், நோய்எதிர்ப்பு திறன் குறைவாக உள்ளவர்களுக்கு அடிக்கடி இந்த தேமல் தொல்லை கொடுக்கும். தலை படை, முகப்படை, படர்தாமரை என வகைப்படுத்தலாம்.

வியர்வை அதிகம் சுரக்கும் சருமத்தை கொண்ட நபர்கள் தினமும் இரு வேளை கடலை மாவு அல்லது பச்சை பயறு மாவு கொண்டு குளிக்க வேண்டும்.

தேமலுக்கு சோப்பு வேண்டும் என நினைப்பவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் கெமிக்கல் குறைவான சோப்பை பயன்படுத்த வேண்டும்.

துளசி இலைகளை பேஸ்ட் போல் அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, ஒரு மணி நேரம் ஊற வைத்து கழுவினால் மறையும்.

ஒரு கப் நீரில் வேப்பிலைகளை போட்டு நன்கு கொதிக்க வைத்து, 1 டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால், சரும பிரச்னை குறையும்.

வேப்பிலையை அரைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால், தேமல் மறையும்.

மஞ்சள் தூளை தயிரில் கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர வைத்து, கழுவி வந்தால் மறையும்.
தேங்காய் எண்ணெயில் சுத்தம் செய்த ஆடாதோடை இலையை போட்டு ஒரு வாரம் வெயிலில் வைத்த பிறகு, தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் மறையும்.
முள்ளங்கியை மோருடன் கலந்து அரைத்து, தேமல் உள்ள இடங்களில் தடவினால் மறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *